சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா முறையீட்டு வழக்கு - விசாரணை 29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பதவி நீக்கத்தை எதிர்த்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணை 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #CBI #CVC #AlokVerma
சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா முறையீட்டு வழக்கு - விசாரணை 29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்ட நிலையில் தன்னை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நீதிபதி பட்நாயக் மேற்பார்வையில் மத்திய ஊழல் தடுப்பு குழு ஒன்றை நியமித்து கடந்த 26-10-2018 சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இரண்டு வாரங்களுக்குள் விசாரணையை முடித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.

விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவின் வழக்கறிஞர் துஷார் மேத்தா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வு மறுவிசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

இதுவரை பெறப்பட்ட விசாரணை அறிக்கையில் காணப்படும் சில விபரங்கள் திருப்திகரமாகவும், சில அதிருப்தியான வகையிலும் காணப்படுவதால் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த அறிக்கை தொடர்பான தனது பதிலை தெரிவிக்குமாறு அலோக் வர்மாவை அறிவுறுத்தி, மறுவிசாரணையை ஒத்திவைத்தனர். அலோக் வர்மா தனது பதிலை எழுத்துப்பூர்வமாக நேற்று தாக்கல் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com