மதுபானங்கள் கடத்தி விற்பனை: கருங்கல் அருகே போலீசாரை கண்டித்து பெண்கள் மறியல்

அனந்தமங்கலம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து பெண்கள் கருப்பு கொடி ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுபானங்கள் கடத்தி விற்பனை: கருங்கல் அருகே போலீசாரை கண்டித்து பெண்கள் மறியல்
Published on

களியக்காவிளை:

குமரி மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

இதனால் முக்கிய நகரங்களில் இருந்த சுமார் 59 கடைகள் மூடப்பட்டன. இதற்கு பதிலாக வேறு இடங்களில் கடை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு பல இடங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் இன்னும் பல ஊர்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

கடைகள் இல்லாததால் குமரி மாவட்ட குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களை திருப்திபடுத்த கேரள எல்லையை யொட்டியுள்ள குமரி மாவட்ட கிராமங்களை சேர்ந்த சிலர் கேரளாவுக்கு சென்று அங்கிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

புதுக்கடையை அடுத்த அனந்தமங்கலம் காட்டுவிளை பகுதியில் இதுபோல கேரள மது பானங்கள் கடத்திவரப்பட்டு அவற்றில் கலப்படம் செய்து சட்டவிரோதமாக விற்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இது தொடர்பாக அவர்கள் புதுக்கடை போலீசிலும் புகார் அளித்தனர்.

அதன்பின்பும் சட்டவிரோத மது விற்பனை குறையவில்லை என்றும் இதனால் ஊருக்குள் பிரச்சினை ஏற்பட்டு பெண்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் திடீரென அனந்தமங்கலம் காட்டுவிளை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அனந்தமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மது பாட்டில்களையும் கைப்பற்றி அவற்றை சாலையில் வரிசையாக வைத்திருந்தனர். மேலும் இதனை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் சமரச பேச்சு நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com