டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை- மர்ம நபர்கள் கைவரிசை

மதுரையில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டாஸ்மாக் கடையில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்
டாஸ்மாக் கடையில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்
Published on

மதுரை:

மதுரை நகர் பகுதிகள் மற்றும் பரவை உள்ளிட்ட சில பகுதிகளில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. எனவே இந்த பகுதியில் உள்ள மதுப்பிரியர்கள் திருமங்கலம், மேலூர், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு சென்று அந்தப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி வருகின்றனர்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக கடந்த சில தினங்களாக இந்த டாஸ்மாக் கடை பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மது பாட்டில்கள் திருட்டு போயிருப்பதை கண்டனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தியதுடன் திருடர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து இந்த டாஸ்மாக் கடை பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் இந்த கடைக்குள் புகுந்து அங்கிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி விட்டு சென்றுள்ளனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் முதல் கட்டமாக விசாரணையை தொடங்கி இருக்கிறோம் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com