

டோக்கியோ:
ஜப்பானின் டோக்கியோ நகரில் இருந்து கோலாலம்பூர் நோக்கி இன்று அதிகாலை (உள்ளூர் நேரப்படி 2.59) ஏர்ஏசியா பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 369 பயணிகள், 10 ஊழியர்கள் பயணம் செய்தனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதனால் அருகில் உள்ள ஒக்கினாவா விமான நிலையத்தை தொடர்பு கொண்ட அவர், அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார்.
அனுமதி கிடைத்ததும் ஒக்கினாவா விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பயணம் செய்வதற்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
உரிய நேரத்தில் விமானத்தை ஒக்கினாவா விமான நிலையத்தில் தரையிறக்கியதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். #Tamilnews