

பராக் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்காவை ஆண்ட முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) அந்நாட்டின் அதிபராக கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.
இவரது மகனான ஜார்ஜ் டபிள்யூ. புஷ், அந்நாட்டின் அதிபராக 2001 முதல் 2008-ம் ஆண்டுவரை இருமுறை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்துள்ளார்.
நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டும், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்தும் வந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கடந்த வெள்ளிக்கிழமை தனது 94-வது வயதில் டெக்சாஸ் மாநிலத்தில் மரணம் அடைந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த புஷ் உடலை டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து தலைநகர் வாஷிங்டனுக்கு அரசு மரியாதையுடன் கொண்டு வருவதற்காக அதிபர்கள் மட்டுமே பயன்படுத்தும் சிறப்பு விமானத்தை டொனால்ட் டிரம்ப் அனுப்பி வைத்துள்ளார்.
பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் இந்த சிறப்பு விமானத்துக்கு ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ என்று பெயர். தற்போது புஷ் உடலை கொண்டு வரும் நோக்கத்துக்காக அனுப்பப்பட்டுள்ளதால் இவ்விமானத்துக்கு ’41-வது சிறப்பு நோக்கம்’ (Special Air Mission 41) என தற்காலிக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மனைவியுடன் புஷ்
அங்குள்ள தேசிய தலைமை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட வெகுசில முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பின்னர், மீண்டும் இதே விமானம் மூலம் புஷ் உடல் புதன்கிழமை மாலை டெக்சாஸ் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்ட்டன் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் அவரது மனைவி பார்பரா புஷ் சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் வரும் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது.