

இஸ்லாம் மதத்தில் ஒரே நேரத்தில் 'முத்தலாக்’ என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் 28-12-2017 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
அங்கு சிறிய விவாதத்துக்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் கிடைக்காததால் மாநிலங்களவையில் முடங்கிப் போனது.
இருப்பினும், ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அவசர சட்டமாக முத்தலாக் ஒழிப்பு சட்டம் 19-9-2018 அன்று அமல்படுத்தப்பட்டது. பின்னர், அடுத்தடுத்து மீண்டும் இருமுறை நீட்டிப்பும் செய்யப்பட்டது.
முத்தாலக் முறையில் மனைவியை விவாகரத்து செய்யும் கணவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
இந்த சட்டத்துக்கு எதிராக சில இஸ்லாமிய அமைப்புகளும் தனிநபர்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.