வேளாண்மைத் துறையின் பெயரை மாற்றிய திரிபுரா முதல்வர்

திரிபுரா மாநிலத்தில் வேளாண்மைத் துறையின் பெயரை மாற்றி முதல்வர் பிப்லப் தேவ் அறிவித்துள்ளார். மேலும் விவசாயிகளின் பிரச்சனைகளை அறிந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வேளாண்மைத் துறையின் பெயரை மாற்றிய திரிபுரா முதல்வர்
Published on

உதய்பூர்:

திரிபுரா மாநிலம் உதய்பூரில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது. வேளாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் முதல்வர் பிப்லப் தேவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது, திரிபுரா மாநிலத்தில் வேளாண்மைத் துறையானது இனி, ‘வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை’ என்று அழைக்கப்படும் என்றார்.

அரசாங்கத்தின் நிறங்கள் வானவில் வண்ணமாக இருக்க வேண்டும். மக்களின் நன்மைகளுக்காக அரசாங்கம் வேலை செய்ய வேண்டும். விவசாயத் துறையின் ஆன்மா விவசாயிகள். அதேபோல் உள்கட்டமைப்பும் அதிகாரிகளும் விவசாயத்துறையின் உடல். எனவே, ஆன்மாவும் உடலும் இணைந்து பணியாற்ற வேண்டும். வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியம்.

வேளாண்துறை விவசாயிகளின் வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும். அதிகாரிகள் விவசாயிகளின் பிரச்சனைகளை நேரில் சென்று தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும். 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. சொட்டுநீர் பாசனம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன்மூவம் இந்த இலக்கை எட்ட முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திரிபுரா மாநிலத்தில் அரசுத் துறையின் பெயரை மாற்றுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  #TripuraChiefMinister #GovtDepartmentNameChange

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com