

அடையாறு இந்திரா நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் நேற்று மதியம் 1.15 மணி அளவில் மீகாரை சேர்ந்த மணிஸ் குமார் (42) துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொள்ளையடித்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் தப்பிய மணிஸ் குமாரை பொது மக்களின் துணையுடன் போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது அவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அடையாறு போலீசார் கொள்ளையன் மணிஸ் குமார் மீது பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கி சூடு நடத்தியது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கைதான அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பாலு முதலியார் தெருவில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வரும் மணிஸ்குமார் ஐஸ் வியாபாரம் செய்து வந்துள்ளார். வங்கியில் துணிச்சலுடன் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தது ஏன்? என்பது பற்றி அவர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
நீண்ட நாட்களாக ஐஸ் வியாபாரம் செய்து வரும் என்னால் வசதியாக வாழ முடியவில்லை.
ஆனால் பணக்காரன் ஆக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. ஏதாவது குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன். திடீர் பணக்காரன் ஆகவேண்டுமென்றால் பெரிய அளவில் கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டேன்.
இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் எனது சொந்த ஊரான பீகாருக்கு சென்றிருந்த போது 2 துப்பாக்கிகளை வாங்கி வந்தேன். அந்த துப்பாக்கிகளை காட்டி மிரட்டித்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டேன்.