எளிமையாக நடைபெற்ற வக்கீல் நந்தினியின் திருமணம்

மதுவுக்கு எதிராக போராடி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்த வக்கீல் நந்தினியின் திருமணம் நேற்று எளிமையாக நடைபெற்றது.
நந்தினி-குணாஜோதிபாசு திருமணம் நடந்தது.
நந்தினி-குணாஜோதிபாசு திருமணம் நடந்தது.
Published on

மதுரை:

மதுரையை சேர்ந்த வக்கீல் நந்தினி தனது தந்தை ஆனந்தனுடன் சேர்ந்து மது ஒழிப்பு போராட்டத்தை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நந்தினிக்கும், அவரது தந்தை ஆனந்தனின் நண்பரின் மகன் குணா ஜோதிபாசுவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன்படி கடந்த 5-ந்தேதி இவர்களது திருமணம் நடைபெறுவதாக இருந்தது

அதற்கு முன்னதாக மது ஒழிப்பை வலியுறுத்தி நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் சிவகங்கை மாவட்டத்தில் போராட்டம் நடத்தினர். இதனால் 2 பேரும் கைது செய்யப்பட்டு திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதித்ததாக நந்தினி, ஆனந்தன் ஆகியோர் நீதிபதி உத்தரவின் படி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் நந்தினி-குணா ஜோதிபாசு திருமணம் நின்றுபோனது.

நேற்று முன்தினம் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து நந்தினி திருமணத்தை உடனே நடத்த தந்தை ஆனந்தன் முடிவு செய்தார்.

அதன்படி மதுரை மாவட்டம் தென்னமநல்லூரில் உள்ள அவர்களது குலதெய்வம் கோவிலான பட்டவன் சுவாமி கோவிலில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நேற்று நந்தினி-குணா ஜோதிபாசு திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. இதில் இருவீட்டாரைச் சேர்ந்த சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்தவுடன் கோவில் வளாகத்தில் மணமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதில், இன்று இல்லற வாழ்வில் இணையும் நாங்கள் இருவரும் இன்றுபோல் என்றும் இணை பிரியாது ஒற்றுமையுடன் வாழ்வோம் என்றும், இல்லற வாழ்விலும், சமுதாய வாழ்விலும் இணைந்து செயல்படுவோம் என்றும் உறுதியேற்கிறோம்.

ஒவ்வொரு மனிதரும் சமுதாயத்தில் பிரிக்க முடியாத அங்கம் என்பதால் நாம் வாழும் சமுதாயம் சரியாக முறையாக அறநெறிகளின்படி இயங்கினால் தான் நாம் ஒவ்வொருவரும் செம்மையாக சிறப்பாக வாழ முடியும்.

எனவே சொந்த நலனை விட சமுதாய நலனுக்கு முன்னுரிமை தந்து வாழ்வோம் என்றும், நம்மை வாழவைக்கும் இயற்கை, நமக்கு வாழ்வியல் அறநெறிகளை வகுத்துத்தந்த நம் முன்னோர்கள் மற்றும் மனிதகுல மேன்மைக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த தியாகிகள், மாவீரர்கள் சாட்சியாக உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com