கஜா புயல் நிதிக்காக அதிமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் ஒருமாத சம்பளம் வழங்குவர் - முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்குவர் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami #GajaCycloneRelief
கஜா புயல் நிதிக்காக அதிமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் ஒருமாத சம்பளம் வழங்குவர் - முதலமைச்சர் பழனிசாமி
Published on

புதுடெல்லி:

தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் தாக்கத்தால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. அந்தந்த மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, கஜா புயல் பாதித்த இடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வு தொடர்பாக முதல் கட்ட அறிக்கையை தயாரித்துக் கொண்டு இன்று காலை டெல்லி சென்றார்.

அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். அப்போது கஜா புயல் பாதிப்புகள் குறித்து விளக்கினார். 

கஜா புயல் நிவாரணமாக 15,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நாளை மாலை தமிழகம் வருகிறது. நாளை தமிழகம் வரும் மத்தியக்குழுவினர் புயல் பாதித்த பகுதிகளில் 3 நாட்கள் ஆய்வு செய்கின்றனர்

புயல் பாதித்த பகுதிகளின் புகைப்படங்களை பிரதமரிடம் காண்பித்து நிதி கோரப்பட்டுள்ளது. தமிழக அரசு கோரியுள்ள நிதியை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்குவார்கள் என தெரிவித்தார். #GajaCycloneRelief #AIADMK #EdappadiPalanisamy

X

Maalai Malar
www.maalaimalar.com