கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி தனியார் பஸ்சை சிறைபிடித்து பயணிகள் போராட்டம்

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி தனியார் பஸ்சை சிறைபிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி தனியார் பஸ்சை சிறைபிடித்து பயணிகள் போராட்டம்
Published on

ஆம்பூர்:

வேலூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து திருப்பத்தூருக்கு தனியார் பஸ் நேற்று மதியம் புறப்பட்டது.

இதில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக கூறி, கண்டெக்டரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். இதனால் ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் அருகே பஸ் நிறுத்தப்பட்டது.

அதிலிருந்து கீழே இறங்கிய பயணிகள், கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூடுதலாக பெறப்பட்ட கட்டணத்தை திரும்ப கேட்டனர்.

அதற்கு, கண்டக்டர் பஸ் கட்டணத்துக்கான பயணச்சீட்டு வழங்கிய பிறகு பணத்தை எப்படி தர முடியும். விருப்பமிருந்தால் தொடர்ந்து பயணியுங்கள். இல்லையென்றால், மாற்று பஸ் மூலம் செல்லலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆவேசமடைந்த பயணிகள் தனியார் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் தாலுகா போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது, பயணிகள் கூறியதாவது:-

இதே பஸ்சில், காலை திருப்பத்தூரிலிருந்து வேலூர் வந்தபோது வழக்கமான கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக ரூ.10 வசூலிப்பது ஏன் என்று கேட்டால், வேறு பஸ் மூலம் செல்லுங்கள் என கண்டக்டர் கூறுகிறார் என்றனர்.

பஸ் கண்டக்டரிடம் விசாரணை நடத்தியபோது, காலையில் சாதாரண பஸ்சாக இயக்கப்பட்டது.

இந்த பஸ் தற்போது விரைவு பஸ்சாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி ஆணை எங்களிடம் உள்ளது. விரைவு பஸ்சுக்கான கட்டணத்தை மட்டுமே பயணிகளிடம் வசூலித்துள்ளேன் என்றார்.

இதையடுத்து, போலீசார் பயணிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com