அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எதையும் செய்வார் - ரோஜா

அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எதையும் செய்வார் என்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா கூறினார்.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா.
Published on

திருமலை:

திருப்பதியில் நடிகை ரோஜா இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதாவுடன் நேற்று வரை நல்லுறவு பாராட்டிய சந்திரபாபு நாயுடு இன்று தனி அந்தஸ்து கோரி போராட்டம் நடத்துவது வெறும் நாடகமே. நான்கரை வருடமாக தனி அந்தஸ்து வழங்காத மத்திய அரசு இன்று திடீரென்று வழங்குவது சாத்தியமில்லாத வி‌ஷயம்.

இன்று மாநிலத்தில் ஆளும் கட்சி நடத்தும் போராட்டம் யாவும் மக்களை ஏமாற்றும் வித்தை. நிஜமாகவே போராட்டம் செய்திருந்தால் முதல் ஆண்டிலேயே போராடி இருக்க வேண்டும். போராட்டம் செய்த எங்களை சிறையில் அடைத்தனர். அப்போதே போரடியிருந்தால் நியாயம் கிடைத்திருக்கும்.

சந்திரபாபு நாயுடு இதுவரை ஆந்திராவிற்காக எதுவும் செய்யவில்லை. திடீரென்று அதுவும் அடுத்த ஆண்டு தேர்தல் வரும் சமயத்தில் போராட்டம் என்று கூறுவது நகைப்புக்குரியது.

இது தமிழ்நாட்டில் சினிமாத்துறையினர் காவிரி மேலாண்மைக்காக போராட்டம் நடத்தியது போல் தெலுங்கு சினிமாத்துறையினர் தனி அந்தஸ்துக்கு போராட்டம் நடத்தினால் தமிழக அரசைபோல் அது அவரவர் உரிமை என்று இந்த அரசு விடுவதில்லை. போராளிகளை கைது செய்து அடித்து மிரட்டுவார்கள். இதனால் இங்கு போராட்டம் வெற்றி பெறுவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் ஒரு தமிழர் கூட இடம் பெறாதது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நடிகை ரோஜா: -

சந்திரபாபு நாயுடு அரசியல் ஆதாயத்திற்காக எதையும் செய்வார் என்பதையே இது காட்டுகிறது. உலகில் உள்ள பெருவாரியான மக்கள் போற்றும் புனித தலமாகிய திருமலையில் இந்து அல்லாதவரையும் தேவஸ்தான அறங்காவலர் குழுவில் நியமிக்க முன் வரும் சந்திரபாபுநாயுடு அவருக்கு பினாமியாக செயல்பட்ட சேகர் ரெட்டியை காரணம் காட்டி அரசியல் ஆதாயம் செய்யும் மனப்பாங்கு கொண்டவர்.

பா.ஜ.க. வை எதிர்த்து போராடுவதாக கூறி கொண்டு பா.ஜ.க. வை சேர்ந்த ஒரு மகாராஷ்டிர எம்.எல்.ஏ.விற்கு உறுப்பினர் பதவியை பரிந்துரைத்திருக்கிறார் என்றால் சந்திரபாபு நாயுடு எப்பேர்பட்ட அரசியல்வாதி என்று பார்த்து கொள்ளுங்கள். தனக்கு ஆதாயம் கிடைப்பதற்காக எதையும் செய்யக்கூடியவர் என்பது இனியாவது மக்களுக்கு விளங்கும் என்றார்.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com