

கரூர்:
பா.ஜ.க. பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடர்ந்தனர். இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே)மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2ல் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 5-ந்தேதி நடைபெற்ற வழக்கில் எஸ்.வி. சேகர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று 20-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும். இல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இந்தநிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை கரூர் கோர்ட்டில் இன்று நடைபெற்றது.
இதனிடையே இந்த வழக்குகள் சம்பந்தமாக 6 வாரத்திற்கு கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி, அவர் 6 வாரம் கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். இதனால் எஸ்.வி.சேகர் கரூர் கோர்ட்டில் இன்று நடைபெற்ற விசாரணையில் ஆஜராகவில்லை.
இந்தநிலையில் அவர், கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்ததற்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி இந்திய குடியரசு கட்சியின்(அத்வாலே) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் வருகிற 23-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். #SVeShekher