

திண்டுக்கல் அருகில் உள்ள மாரம்பாடியில் நடந்த கோவில் திருவிழாவில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில்தான் பிறந்தவன். எனது சமூகத்தை சார்ந்தவர்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளேன். என்னை திருவாடனை தொகுதி சட்டமன்ற வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்தபோது என்னிடம் ரூ.1500 மட்டுமே இருந்தது.
ஜெயலலிதா எனக்கு நம்பிக்கை அளித்து கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என உறுதி அளித்தார். அதன்படி வெற்றிபெறவும் வைத்தார். ஆனால் என்னை வேட்பாளராக அறிவிக்க செய்ததற்கு சசிகலாவே காரணம்.
வறுமையில் இருந்த காலத்தில் எனது உறவினர்கள்கூட எனக்கு பெண் தர மறுத்து விட்டனர்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் என்னை பெரிதும் பாதித்து வருகின்றன.
தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது மக்கள் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனரா? என்பது கேள்விக்குறியே.
ஆர்.கே.நகர் தேர்தலில் ஏற்பட்ட முடிவே இதனை பெரும்பாலான அரசியல் கட்சியினரையும் பொதுமக்களையும் சிந்திக்க வைத்துள்ளது. இனிமேல் நான் சட்டமன்ற தேர்தலிலோ வேறு எந்த தேர்தலிலோ போட்டியிடும் எண்ணம் இல்லை. சினிமாவில் மட்டுமே முழு கவனம் செலுத்த உள்ளேன். தற்போது நான் வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு நியாயமாக நடந்து கொள்வேன்.