திருப்பத்தூர் அருகே விபத்தில் தொழில் அதிபர் பலி

திருப்பத்தூர் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழில் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர் அருகே விபத்தில் தொழில் அதிபர் பலி
Published on

திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சொக்காலை கோட்டையை சேர்ந்தவர் செழியன் (வயது 48). இவர் காரைக்குடியில் மர வியாபாரம் செய்து வந்தார்.

தொழில் வி‌ஷயமாக சில நாட்களுக்கு முன்பு செழியன் தனது நண்பர்கள் முருகன் (46), கண்ணன் என்ற கணேசன் (44) ஆகியோருடன் காரில் கோவைக்கு சென்றார். நேற்று 3 பேரும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். இரவு 11 மணி அளவில் கார் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. காரின் உள்ளே இருந்த செழியன், முருகன், கண்ணன் ஆகிய 3 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

உடனே அப்பகுதி மக்கள், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் சிக்கிய 3 பேரையும் போராடி மீட்டனர். பின்னர் அவர்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி செழியன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரின் நிலைமை மோசமானதால் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தேவகோட்டையை சேர்ந்த சத்யராஜிடம் என்வரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com