நிறம் மட்டுமே அழகு கிடையாது: இனவெறியை டுவிட்டரில் சாடிய அபிநவ் முகுந்த்

நிறம் மட்டுமே அழகு கிடையாது என்று இந்திய டெஸ்ட் அணி தொடக்க வீரர் அபிநவ் முகந்த் டுவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சமூக வலைத்தளத்தில் இனவெறி கருத்து பதிவிடுவதை சாடியுள்ளார்.
நிறம் மட்டுமே அழகு கிடையாது: இனவெறியை டுவிட்டரில் சாடிய அபிநவ் முகுந்த்
Published on

அதில் அபிநவ் கூறுகையில் ‘‘10 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். சிறிது சிறிதாக முன்னேறி தற்போதைய நிலையை அடைந்துள்ளேன். நாட்டுக்காக விளையாடுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். இதை நான் எழுதுவதற்குக் காரணம், அனுதாபம் பெறுவதற்காகவோ அல்லது மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவோ அல்ல. ஒரு பிரச்சினை தொடர்பாக மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.

15 வயது முதல் இந்தியா முழுக்கவும் இந்தியாவுக்கு வெளியேயும் பயணம் செய்து வருகிறேன். சிறுவயது முதல் என் நிறம் குறித்த மக்களின் எண்ணம் எனக்கு எப்போதும் புதிராக இருக்கும். கிரிக்கெட் அறிந்தவர்கள் இவ்விஷயத்தை நன்கு அறிவார்கள்.

வெயிலில் நாள் முழுக்க நான் பயிற்சி மேற்கொள்வேன். ஒருமுறை என் நிறம் மாறியதற்காகவோ குறைந்ததற்காகவோ வருத்தப்பட்டதில்லை. ஏனெனில் நான் எதில் ஈடுபடுகிறேனோ அதை விரும்பிச் செய்கிறேன். வெயிலில் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டதாலேயே என்னால் சில உயரங்களைத் தொட முடிந்தது. இந்தியாவின் அதிக வெப்பப் பகுதியான சென்னையைச் சேர்ந்தவன் நான். என் இளமைக்காலம் முழுக்க மைதானங்களில் கழிந்துள்ளது.

என்னை வெவ்வேறு விதமான பெயர்களில் அழைத்துள்ளார்கள். சிரித்துக் கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவேன். ஏனெனில் எனக்குப் பெரிய லட்சியங்கள் உண்டு. சிறுவயதில் இதனால் பாதிக்கப்பட்ட நான் பிறகு மனபலம் கொண்டவனாக மாறினேன். அவை என்னைக் கீழே தள்ளமுடியாது. என்னை அவமானப்படுத்தும் போது பெரும்பாலான நேரங்களில் அதற்கு நான் எதிர்வினை செய்வதில்லை. இன்று நான் எனக்காக மட்டும் இதைப் பேசவில்லை. என்னைப் போன்று நம் நாட்டில் தோலின் நிறத்தைக் கொண்டு ஏளனத்தைச் சந்திக்கும் அனைவருக்காகவும் பேசுகிறேன். சமூக வலைத்தளங்களினால் இந்தப் போக்கு இன்னும் மோசமாகியுள்ளது. சிவப்பழகு மட்டுமே அழகல்ல நண்பர்களே.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com