ஆருஷி கொலை வழக்கு: பெற்றோரை விடுதலை செய்தது அலகாபாத் ஐகோர்ட்

நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கில் ஆருஷியின் பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆருஷி கொலை வழக்கு: பெற்றோரை விடுதலை செய்தது அலகாபாத் ஐகோர்ட்
Published on

டெல்லி அருகே நொய்டாவைச் சேர்ந்தவர் ராஜேஷ் தல்வார். இவரது மனைவி நூபுர் தல்வார். பல் மருத்துவர்களான இவர்களின் 14 வயது மகள் ஆருஷி தல்வாரும், வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜும் கடந்த 2008ம் ஆண்டு வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலை வழக்கில், மாநில போலீசாரால் துப்பு துலக்க முடியாததால் வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவில் ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார், நூபுல் தல்வார் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த காசியாபாத் சிபிஐ நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.

தண்டனையை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கின் அனைத்து தரப்பு சாட்சியங்களிடமும் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவ்வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது, குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ் தல்வார், அவரது மனைவி நூபுர் தல்வார் ஆகியோருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தனர். வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் என அறிவித்து தண்டிக்க முடியாது என்றும் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com