டெல்லி வன்முறை- ஆம் ஆத்மி கட்சியில் இருந்து கவுன்சிலர் தாஹிர் உசேன் சஸ்பெண்ட்

டெல்லி வன்முறையின்போது உளவுத்துறை அதிகாரி கொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கவுன்சிலர் தாஹிர் உசேன் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
தாஹிர் உசேன்
தாஹிர் உசேன்
Published on

புதுடெல்லி:

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் வன்முறை தலைவிரித்தாடியது. வீடுகள், கடைகள், வாகனங்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். 

இந்த வன்முறையில் நேற்று வரை தலைமைக் காவலர், உளவுத்துறை அதிகாரி உள்ளிட்ட 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா கொல்லப்பட்டது தொடர்பாக, ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை, தீவைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தாஹிர் உசேன் வீட்டு மாடியில் வன்முறையாளர்கள் இருந்ததாகவும், தாக்குதலுக்காக பெட்ரோல் குண்டுகள், செங்கற்கள் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இதனையடுத்து தாஹிர் உசேன் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான போலீஸ் விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

‘கவுன்சிலர் என்ற முறையில் அவர் போராடும் மக்களிடம் பேசியிருக்க வேண்டும், இப்படி நடந்துகொள்ளக் கூடாது. முதலில் அவரைப்பிடித்து விசாரிக்க வேண்டும். அவரது வீடு முழுவதும் ஆயுதங்கள் இருந்தன’ என அன்கிட் சர்மாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். 

ஆனால், வன்முறையிலும் உளவுத்துறை அதிகாரி கொலையிலும் தனக்கு தொடர்பு இல்லை என்று தாஹிர் உசேன் மறுத்துள்ளார். தொலைக்காட்சியில் பார்த்தபோதுதான் அதுபற்றிய தகவல் தெரியவந்ததாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com