ஆதார் மோசடி குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் மீது வழக்குப்பதிவு

500 ரூபாய்க்கு ஆதார் விவரங்கள் விற்கப்படுவதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. #AadhaarLeaks #AadhaarFIR
ஆதார் மோசடி குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் மீது வழக்குப்பதிவு
Published on

புதுடெல்லி:

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கமாகும். அந்த வகையில் நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டு வருவதோடு, மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆதார் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அப்படி பெரிதாக பாதுகாப்பு எல்லாம் எதுவும் இல்லை என்பது பஞ்சாப்பை சேர்ந்த ரச்னா கயிரா என்ற பத்திரிக்கையாளர் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி பேடிஎம் மூலம் ரூ.500 செலுத்தினால் ஆதார் தகவல்கள் குறித்த இணையதள முகவரி மற்றும் அதன் கடவுச் சொல் அனுப்பப்படுகிறதாம்.

அந்த இணையதளத்தில் கோடிக்கணக்கான மக்களின் ஆதார் எண்கள், வீட்டு முகவரி என அனைத்து தகவல்களும் இருந்துள்ளது. இதையடுத்து அந்த செய்தியாளர் சண்டிகர் பகுதி தேசிய தனிநபர் அடையாள (உதாய்) ஆணையத்திடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த புகாரை உதாய் அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதனால் எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் எல்லாம் கொதித்தன. அனைவரும் ஆதார் அமைப்பிற்கும், மத்திய அரசிற்கும் எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். இது தேசிய அளவில் பிரச்சனையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது அந்த மோசடியை கண்டுபிடித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதாய் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் சண்டீகர் போலீசார் மூன்றிற்கும் மேற்பட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மோசடியை செய்த நபர்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்குமாறு பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  #AadhaarLeaks #AadhaarFIR #RachnaKhaira #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com