நீலகிரி மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 10 பேர் கொண்ட குழு - சுகாதார துறை இணை இயக்குனர் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஊட்டி:

மலை மாவட்டமான நீலகிரியில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ‘ஏடிஸ்’வகை கொசுக்கள் உற்பத்தியாவதில்லை. ஆனால், சமவெளி பகுதிகளுக்கு சென்று வரும் பொதுமக்களிடம் இருந்து டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

தற்போது இந்த மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் காய்ச்சலுக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நடந்த பரிசோதனையில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுகாதார துறை இணை இயக்குனர் பொற்கொடி கூறுகையில்,

நீலகிரியை பொறுத்த வரையில் டெங்கு பாதிப்பு யாருக்கும் இல்லை. வெளியூர் சென்று வந்தவர்களில், 7 பேருக்கு அறிகுறி தென்பட்டதை அடுத்து, அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தினமும் வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்காக, அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு உள்ளது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com