

தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் தாசில்தாராக பணிபுரிபவர் லாவண்யா. இவர் ஐதராபாத்தின் ஹயாத்நகரில் வசித்து வருகிறார். லாவண்யா வேலை செய்யும் அலுவலகத்தில் அனந்தையா என்பவர் வி.ஆர்.ஓவாக பணிபுரிகிறார். இவர் விவசாயி ஒருவரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்றபோது சிக்கினார்.
முன்னதாக அனந்தையா, பாஸ்கர் எனும் விவசாயியிடம் ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்டு, அதில் ரூ.5 லட்சம் தாசில்தாருக்கும், ரூ.3 லட்சம் தனக்கும் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த விவசாயி அனந்தையாவுக்கு ரூ.4 லட்சம் வழங்கியுள்ளார். பணம் தன் கைக்கு வந்துவிட்டதாக அனந்தையா லாவண்யாவுக்கு தெரிவித்துள்ளார்.
பாஸ்கர், சில நாட்களுக்கு முன்னர், தனது பிரச்னையைத் தீர்க்கக் கோரி தாசில்தார் லாவண்யா காலில் விழுந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. விவசாயி பாஸ்கர், தனக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் பிழை இருப்பதை பார்த்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டை லாவண்யா மறுத்து வந்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் லாவண்யா வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ.93.5 லட்சம் ரொக்கமாகவும், 400 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து லாவண்யா கைது செய்யப்பட்டார்.