பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் 86 முதியோர்கள் இடமாற்றம் - அதிகாரிகள் மீண்டும் ஆய்வு

பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து முதல் கட்டமாக தொழுப்பேடு, வில்லுவராயநல்லூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு 86 முதியோர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் 86 முதியோர்கள் இடமாற்றம் - அதிகாரிகள் மீண்டும் ஆய்வு
Published on

காஞ்சீபுரம்:

உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்திற்கு காய்கறி மூட்டைகள் ஏற்றப்பட்ட வேனில் ஆணின் சடலம் எடுத்துவரப்பட்டது. அதனுடன் 2 முதியோரும் அழைத்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கருணை இல்லத்தில் இறக்கும் முதியோர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் வெளிநாடுகளில் விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதைத்தொடர்ந்து சமூக நலத்துறை, வருவாய்த்துறை போலீசார் உள்ளிட்ட 6 துறை அதிகாரிகள் கருணை இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஒவ்வொரு மாதமும் 40 முதல் 50 முதியோர்கள் இறப்பது தெரிந்தது. இது பற்றிய அறிக்கை மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கலெக்டரின் உத்தரவுப்படி நேற்று 3-வது முறையாக கோட்டாட்சியர் ராஜூ தலைமையில் அதிகாரிகள் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காப்பக நிர்வாகி தாமசிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில் முதியோருக்கு வழங்கப்படும் உணவு தரமில்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அங்கிருந்த பலர் வெளியேற ஆர்வமாக இருந்ததால் அவர்களை வேறு காப்பகத்திற்கு மாற்றும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

முதல் கட்டமாக தொழுப்பேடு, வில்லுவராயநல்லூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு 86 முதியோர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தொழுநோய், மனநலம் பாதித்த 126 ஆதரவற்றோர், படுத்தபடுக்கையாக உள்ள 38 முதியோர், ஊனமுற்ற 9 பேருக்கு காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

அவர்கள் இன்று அல்லது நாளை வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட உள்ளனர்.

இதற்கிடையே இன்றும் கருணை இல்லத்தில் உள்ள முதியோர்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணி தொடங்கியது. அதிகாரிகள் முதியோர்களிடம் விசாரணை நடத்தினர். மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி அ.நூர்முகமது நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த காப்பகம் முறையான அனுமதி இல்லாமல் இயங்கி வந்துள்ளது. அரசு விதிமுறைகள் பின்பற்றபடவில்லை. இங்கு இருப்பவர்கள் பலர் அரசு உதவி பெற்று இயங்கி வரும் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

முறையான விசாரணைக்கு பிறகு காப்பகத்தை மூடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தான் விசாரணையை தொடங்கி உள்ளோம்.

விசாரணையின் முடிவில் காப்பக உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com