விழுப்புரத்தில் பா.ம.க.வினர் ரெயில் மறியல் - 800 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் விழுப்புரத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 800 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் பா.ம.க.வினர் ரெயில் மறியல் - 800 பேர் கைது
Published on

விழுப்புரம்:

காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. விழுப்புரம் ஒருங்கிணைந்த பா.ம.க. சார்பில் மாநில துணை பொது செயலாளர் தங்கஜோதி தலைமையில் நிர்வாகிகள் விழுப்புரம் காந்திசிலை அருகே திரண்டனர்.

பின்னர் அவர்கள் ஊர்வலமாக விழுப்புரம் ரெயில் நிலையம் சென்றனர். அவர்கள் திடீரென்று ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் போலீஸ் பாதுகாப்பை மீறி ரெயில் நிலையத்துக்குள் புகுந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை அவர்கள் மறித்து போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட செயலாளர்கள் சிந்தாமணி புகழேந்தி, உளுந்தூர்பேட்டை ஜெகன், மாநில வன்னியர்சங்க துணை தலைவர் அன்புமணி, மாவட்ட தலைவர் தன்ராஜ், செயலாளர் புண்ணியகோடி, முன்னாள் மாவட்ட செயலாளர் பழனிவேல், மாவட்ட துணை செயலாளர் செங்காடு மணிமாறன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட 800 பேர் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்கள் ரெயில் என்ஜீன்மேல் ஏறியும், தண்டவாளத்தில் படுத்தும் போராட்டம் நடத்தினர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேன்களில் ஏற்றி அருகில் உள்ள திருமணமண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.

செஞ்சி கூட் ரோடு பகுதியில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ரகுபதி தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தில் நிர்வாகிகள் சிவாஜி, பாஸ்கரன், ராமு, பார்த்தீபன், அருள்பாண்டி உள்பட24 பேர் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் ரகுபதி உள்பட 24 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com