திருப்பூரில் இருந்து கோவை மத்திய சிறைக்கு 75 கைதிகள் மாற்றம்

திருப்பூர் மாவட்ட கிளை சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு 75 கைதிகள் மாற்றப்பட்டனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுப்பிவைக்கப்பட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருப்பூர்:

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை அறிவித்து வருகிறது. இதனை மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன.

இதற்கிடையே சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக கைதிகள் கிளை சிறையில் இருந்து பெரிய சிறைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். அதன்படி திருப்பூர் மாவட்ட கிளை சிறை குமரன் ரோட்டில் உள்ளது. இந்த சிறையில் அடி, தடி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய 75 கைதிகள் உள்ளனர். இந்த கைதிகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதன் பின்னர் நேற்றுகாலை திருப்பூர் மாவட்ட கிளை சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு 75 கைதிகளும் போலீஸ் பாதுகாப்புடன் மாற்றப்பட்டனர். தொடர்ந்து சிறை அனைத்தும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. இதன் பின்னர் வருகிற கைதிகள் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இன்னும் 2 நாட்களுக்கு இந்த சிறை காலியாக இருக்கும். இதற்கிடையே வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் இருந்தால், அவர்கள் அவினாசி கிளைச்சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். உள்ளே அனுமதிக்கப்படும் கைதிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com