கிளிமஞ்சாரோ மலையில் ஏறி ஐதராபாத் சிறுவன் சாதனை

ஐதராபாத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன், ஆப்பிரிக்காவின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்துள்ளான்.
கிளிமஞ்சாரோ மலையில் ஏறி ஐதராபாத் சிறுவன் சாதனை
Published on

ஐதராபாத்:

ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டில் கிளிமஞ்சாரோ மலைச்சிகரம் உள்ளது. ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த இந்த மலைச்சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 5895 மீட்டர் உயரத்தில் உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து மலையேற்றக் குழுவினர் இங்கு வருகின்றனர். அவ்வகையில் ஐதராபாத்தில் இருந்து சமீபத்தில் ஒரு குழு கிளிமஞ்சாரோவுக்கு சென்றது. அதில் 7 வயது சிறுவன் சமன்யு போத்துராஜூவும் ஒருவன்.

சமன்யு தன் தாய் லாவண்யா மற்றும் பயிற்சியாளருடன் மலையேற்றத்தில் ஈடுபட்டான். தாய் லாவண்யாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பாதியிலேயே திரும்பிவிட்டார். அதன்பிறகும் மனம் தளராத சிறுவன் சமன்யு கடந்த 2-ம் தேதி உகுரு சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தான்.

இந்த சாதனை குறித்து சமன்யு கூறுகையில், ‘நான் பனிப்பொழிவை மிகவும் விரும்புவதால், கிளிமஞ்சாரோ சென்றேன். நாங்கள் பயணம் மேற்கொண்டபோது மழை பெய்ததால் சாலைகளில் கற்கள் நிறைந்து காணப்பட்டன. கால்களில்  வலி ஏற்பட்டதால் சற்று பயந்தேன். ஆனால் இடையிடையே ஓய்வு எடுத்து சிகரத்தை அடைந்தேன்’ என்றான்.

‘எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் பவன் கல்யாணை சந்திக்க விரும்புகிறேன். மலையேற்றத்தில் உலக சாதனை படைத்தால்  பவன் கல்யாணை சந்திக்க அழைத்து செல்வதாக என் தாய் கூறியிருக்கிறார். அவரை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிகரத்தில் சாதனை படைக்க உள்ளேன்’ என்றும் கூலாக கூறுகிறான் சமன்யு. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com