

தேனி:
தேனி பூதிபுரத்தைச் சேர்ந்த மன நலம் பாதித்த வாய் பேச முடியாத 7 வயது சிறுமி அரண்மனைபுதூர் ரோட்டில் உள்ள தனியார் மன நல பயிற்சி மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை பார்க்க சென்ற அவரது தாய் தனது மகளின் முகத்தில் மாற்றம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அவரது ஆடையை களைந்து பார்த்த போது சிறுமியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம், சப்-இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் விசாரணை நடத்தாமல் இருந்து வந்துள்ளனர்.
எனவே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய சம்பவத்தில் தொடர்புடைய தனியார் மன வளர்ச்சி குன்றிய நிறுவன உரிமையாளர் சரவணன் மீதும் உரிய விசாரணை நடத்தாத அனைத்து மகளிர் போலீசார் மீதும் உடனடி நடவடிக்கை எடுத்து இச்சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அனைத்து கட்சியினர் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதனால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.