

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதுபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்), மைசூருவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக இரு அணைகளும் கடந்த 19-ந்தேதி இரவு முழுகொள்ளளவை எட்டின. இதைதொடர்ந்து இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழையும், சில சமயங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவை பொறுத்து, அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.