

இந்தியாவில் கொரோனா 2-வது அலை புயல் போன்று சுழற்றி அடித்து வருகிறது. இதில் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் தினந்தோறும் பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது.
கடந்த வருட பாதிப்பின்போது மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்கு மட்டுமே தட்டுப்பாடு ஏற்பட்டது. 2-வது அலையில் பாதிப்பு ஏற்பட்டவர்களை காப்பாற்ற அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதனால் இந்தியாவில் ஆக்சிஜனுக்கு மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு நிலவியது, டெல்லி, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியாவுக்கு வெளிநாடுகள் மிகப்பெரிய அளவில் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
கடந்த மாதம் 27-ந்தேதி முதல் நேற்று வரை (மே-8) வரை வெளிநாடுகள் செய்த உதவிகளை எவை? என்பதை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
அதன்படி 6738 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 3856 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 16 ஆக்சிஜன் உற்பத்தி மையம், 4668 வெண்டிலேட்டர்ஸ்/பிஐ-பிஏபி, 3 லட்சம் ரெலம்டெசிவிர் மருந்துகள் வந்துள்ளன/அனுப்பப்பட்டுள்ளன.