ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் - பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் - பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு
Published on

சனா :

ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின் பெரும்பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்களும், அதனுடைய கூட்டணி படையினரும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ஏமன் அதிபர் மன்சூர் ஹாதி வெளிநாடு தப்பி சென்றுவிட்டார்.

ஏமனில் மீண்டும் மன்சூர் ஹாதி அரசை அமைக்கும் நோக்கில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சன்னி இஸ்லாமியர்கள் கூட்டணி மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் கடந்த 3 ஆண்டுகளாக ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருகிறது.

ஏமனின் முக்கிய பகுதியான ஹூடேய்டாவில் உள்ள மருத்துவமனை, மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்கள் சந்தையில் சவுதி கூட்டணி படைகள் கடந்த2-ம் தேதி தாக்குதலில் ஈடுபட்டன. இதில், பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியது. 

இந்நிலையில், ’இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது, தாக்குதல் நிகழ்ந்தற்கான சூழ்நிலை குறித்து இன்னும் துல்லியமாக கண்டறியப்படவில்லை.  பொதுமக்களின் வாழ்க்கையும் அவர்களின் சொத்துக்களும் மரியாதை குறைவான நிலையில் நடத்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது’ என ஏமனுக்கான சர்வதேச செஞ்சிலுவை குழுவின் தலைவர் ஜோன்னேஸ் ப்ரூவர்இன்று தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com