

திருக்கனூர்:
திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் பெண்ணை அப்பகுதியை சேர்ந்தவர்கள் அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் பெண்ணை தடுத்து நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அனைவரையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் எனக்கோரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம், திராவிடர் கழகம் உள்ளிட்ட 11 அமைப்புகள் கோவிலுக்குள் நுழையும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி போராட்டம் நடத்த இந்த அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இன்று காலை திருக்கனூர் கடை வீதியில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் போராட்டம் நடத்த அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
திருக்கனூர் சாராயக்கடை அருகே வந்தபோது அவர்களை திருக்கனூர் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.