

தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 90 இடங்களை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், 230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கும், 40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கும் நவம்பர் 28-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது.
119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும், 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.
இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநிலங்களிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கி உள்ளன.