

கவுகாத்தி:
அசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள கெரோனி பகுதியில் தோலா - சாடியா பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்தின் அருகில் இன்று இரவு 8.15 மணிக்கு உல்பா பயங்கரவாதிகள் திடீரென திரண்டனர்.
அங்கிருந்த ஒரு வீட்டில் உள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், அருகிலுள்ள வீட்டை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் பலியாகினர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை கைப்பற்றினர்.
உல்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியானதை அறிந்த முதல் மந்திரி சர்பானந்த சோனாவால் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #ULFAAttack