புதுவண்ணாரப்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து பலி

பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.
சுஷ்மிதா
சுஷ்மிதா
Published on

திருவொற்றியூர்:

சென்னை புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகர் 7-வது தெருவில் வசித்து வருபவர் நாகராஜ், தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி சுஷ்மிதா (வயது 23). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

சுஷ்மிதா தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். கர்ப்ப காலத்தில் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதுபற்றி வீட்டில் இருப்பவர்களிடம் அவர் தெரிவித்தார். அதற்கு அவர்கள், பிரசவம் ஆகும் வரை வலியை பொறுத்துக்கொள்ளும்படி அறிவுரை வழங்கினர்.

ஆனால் பிரசவ வலிக்கு பயந்த சுஷ்மிதா, நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு சென்ற அவர், திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சுஷ்மிதா உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுஷ்மிதா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com