சோளிங்கர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பாலில் கலப்படம் செய்த 5 ஊழியர்கள் சஸ்பெண்டு

பாலில் கலப்படம் செய்ததாக சோளிங்கர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
சோளிங்கர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பாலில் கலப்படம் செய்த 5 ஊழியர்கள் சஸ்பெண்டு
Published on

வேலூர் மாவட்டம் சோளிங்கரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு 75-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். சோளிங்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பால் சேகரித்துவரும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க ஊழியர் பாலாஜி என்பவர் ஜானகாபுரம் கிராமத்தில் பால்கொள்முதல் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவர், பாலாஜியிடம் சென்று ஏன் பாலில் கலப்படம் செய்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

அடுத்தநாள் பாலாஜி தன்னுடன் பணிபுரியும் சில பணியாளர்களை அழைத்துச்சென்று ஜெகநாதனை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த ஜெகநாதன் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் இதுகுறித்து சோளிங்கர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பாலில் கலப்படம் செய்வது குறித்து வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஜெகநாதன் புகார் செய்தார். அதன்பேரில் துணைப்பதிவாளர் (பால்வளம்) சர்வேஸ்வரன், சோளிங்கர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் விசாரணை நடத்தினார். விசாரணையில் பொதுமக்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலில், பால்பவுடர் கலக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பாலில் கலப்படம் செய்ததாக சோளிங்கர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க ஊழியர்கள் பாலாஜி, நரசிம்மன், தினேஷ், கோவிந்தன், நீலகண்டன் ஆகிய 5 பேரை சஸ்பெண்டு செய்து துணைப்பதிவாளர் (பால்வளம்) சர்வேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com