

பாட்னா:
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டம் லால்பாக் கிராமத்தில் சோட்டே சவுகான் என்பவரின் வீட்டில் திருமண நிகழ்ச்சியையொட்டி இன்று காலையில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பங்கேற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், பூஜையின் முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த பிரசாதத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குமட்டல், வாந்தி, வயிற்றுவலியால் துடித்தனர். இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 30 குழந்தைகள் உள்பட 45 பேர் உடனடியாக சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தீப் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புட்பாய்சன் காரணமாக அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.