வியாசர்பாடியில் 4 கொள்ளையர்கள் கைது

சென்னை வியாசர்பாடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடியில் 4 கொள்ளையர்கள் கைது
Published on

பெரம்பூர்:

வியாசர்பாடி, பெரம்பூர், எம்.கே.பி.நகர், சர்மாநகர், சாஸ்திரிநகர் பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் திருட்டு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.

இது குறித்து, புளியந்தோப்பு போலீஸ் துணை கமி‌ஷனர் சாய்சரணுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து, எம்.கே. பி.நகர் உதவி கமி‌ஷனர் அழகேசன் மேற்பார்வையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இரவில் தனிப்படை போலீசார் முல்லை நகர் பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்றது. போலீசார் அதை விரட்டிச் சென்று மடக்கினார்கள்.

அதை ஓட்டிச் சென்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் பெயர் தீபன் ராஜ். வியாசர்பாடி ஜே.ஜே.நகரை சேர்ந்த இவர் தனது நண்பர்கள் அஜய், காமேஷ், அரவிந்த் ஆகியோருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் திருடியதும், செல்போன்கள் பறித்ததும் தெரிய வந்தது.

அவர்கள் திருடிய 3 மோட்டார் சைக்கிள்கள், 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்ட தீபன்ராஜ், அஜய், காமேஷ், அரவிந்த் ஆகியோரை எம்.கே.பி. நகர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாரை புளியந்தோப்பு துணை கமி‌ஷனர் பாராட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com