ரூ.1.32 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்களுடன் வங்காளசேதத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

திரிபுராவில் நடத்தப்பட்ட சோதனையில் கத்தை கத்தையாக அமெரிக்க டாலர்களுடன் வங்காளதேசத்தைச் சேர்ந்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.1.32 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்களுடன் வங்காளசேதத்தைச் சேர்ந்த 4 பேர் கைது
Published on

அகர்தலா:

திரிபுரா மாநிலம் சிபாய்ஜலா மாவட்டம், ஸ்ரீமந்தபூர் சோதனைச் சாவடியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வங்காளதேசத்தைச் சேர்ந்த 4 பேரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவர்கள் 2.3 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 1.32 கோடி ஆகும்.

அந்த கரன்சிக்களை கைப்பற்றிய வீரர்கள், பணத்தை கொண்டு வந்த 4 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முறையான விசா ஆவணங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

வங்காள தேசத்தின் கோமில்லா மாவட்டம் வழியாக நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வந்துள்ளனர். கொல்கத்தாவிற்கு வந்த அவர்கள், அமெரிக்க டாலர்களுடன் நேற்று வங்காளதேசத்திற்கு திரும்பியபோது பிடிபட்டுள்ளனர்.

கொல்கத்தாவில் அவர்களிடம் சிலர் இந்த பணத்தைக் கொடுத்து, வங்காளதேசத்தில் உள்ள நபர்களிடம் கொடுக்கும்படி கூறி அனுப்பியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, தீவிரவாத குழுக்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் மூத்த புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com