மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி சிறுவன் அடித்துக்கொன்றது தொடர்பாக மேலும் 4 பேர் கைது
சண்டிகர்:
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது ஜுனைத் கான் என்ற சிறுவன், அவரின் சகோதரர் ஹசீப் மற்றும் 2 உறவுக்கார சிறுவர்கள் ஆகியோர் டெல்லிக்கு ரம்ஜான் பண்டிகைக்கு துணிமணிகளை வாங்க வந்திருந்தனர். இதன்பிறகு, சொந்த ஊருக்கு திரும்ப டெல்லி - பல்லப்கார் பயணிகள் ரயிலில் துக்லகாபாதில் ஏறினர்.
அப்போது, அவர்கள் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 20 பேர் கொண்ட, ஒரு கும்பல் 4 சிறுவர்களின் மீதும் கத்தி, கூர்மையான ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தும் யாரும் அவர்களை தடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் மதுரா செல்லும் வழியில் உள்ள அசாவதி ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து வீசினர். படுகாயமடைந்த 4 பேரில் ஜூனைத் கான் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில், 50 வயதான அரசு அதிகாரியும் அடக்கம். சிறுவர்களை கத்தியால் தாக்கிய நபரை கண்டறிவதற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.

