

புதுடெல்லி:
நாட்டில் மாணவர்களிடம் கல்வி, பொது அறிவு நிலை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிய வருடாந்திர கல்வி நிலை தகவல் என்ற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டது. அடிப்படைக்கு அப்பால் என்ற தலைப்பிட்டு இந்த ஆய்வை அரசு சாரா தொண்டு நிறுவனம் மேற் கொண்டது.
24 மாநிலங்களில் 28 மாவட்டங்களை தேர்வு செய்து 30 ஆயிரம் மாணவர்களிடம் ஆய்வை நடத்தினார்கள். அதில், மாணவர்களின் கல்வி திறனும், பொது அறிவு திறனும் மிக மோசமாக இருப்பது தெரிய வந்தது. அதிலும் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பின்தங்கி இருப்பதும் தெரிந்தது.
கிராமப்புறங்களில் 14 வயது முதல் 18 வயது கொண்டவர்களில் 4-ல் ஒருவருக்கு தங்களது தாய்மொழியை கூட சரியாக வாசிக்க முடிய வில்லை.
57 சதவீத மாணவர்கள் சாதாரண சிறிய கணக்குகள், சிறிய கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க முடியாமல் திணறினார்கள்.
36 சதவீத கிராமப்புற மாணவர்களுக்கு நாட்டின் தலைநகரம் பெயர் தெரியவில்லை. இந்திய வரை படத்தை காட்டிய போது, 14 சதவீதம் பேருக்கு இது எந்த நாடு என்று கூட சொல்ல தெரியவில்லை.
21 சதவீதம் பேருக்கு தாங்கள் வசிக்கும் மாநிலத்தின் பெயர் தெரியவில்லை. இந்திய வரை படத்தில் தங்கள் மாநிலம் எங்கு இருக்கிறது? என்பதை 46 சதவீதம் பேருக்கு சொல்ல தெரிய வில்லை.
ரூபாய் நோட்டுகளை கையில் கொடுத்து அவற்றை எண்ணும்படி சொன்ன போது, 4-ல் ஒருவருக்கு சரியாக எண்ண தெரியவில்லை. 44 சதவீதம் பேருக்கு எடை அளவை சரியாக சொல்ல முடியவில்லை. 40 சதவீதம் பேருக்கு கடிகாரத்தில் நேரம் பார்க்க தெரியவில்லை.
14 வயது நிரம்பியவர்களில் 47 சதவீதம் பேருக்கு ஆங்கிலத்தை வாசிக்க தெரியவில்லை. 18 வயது நிரம்பியவர்களில் 40 சதவீதம் பேருக்கு சரி யாக ஆங்கிலம் வாசிக்க தெரியவில்லை.
79 சதவீதம் பேருக்கு ஆங்கில வார்த்தைகளை தனது சொந்த மொழியில் மொழி பெயர்க்க தெரிய வில்லை.
60 சதவீத மாணவர்கள் பிளஸ்-2வுக்கு பிறகு படிக்க போவது இல்லை என்று கூறினார்கள். 40 சதவீத மாணவர்கள் எந்த இலக்கும் இல்லாமல் படிப்பதாக தெரிவித்தனர்.
79 சதவீதம் பேர் விவசாய பணிகள் செய்வதாக கூறினார்கள். 14 வயதில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்- பெண் விகிதாச்சாரம் சமநிலையில் உள்ளது.
ஆனால், 18 வயது அடையும் போது, 32 சதவீத பெண்களும், 28 சதவீத ஆண்களும் மேல் படிப்புக்கு செல்லாமல் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள்.
மேற்கண்ட விவரங்கள் இந்த ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.