

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் சபாய் சவாய் மதோபூர் நகரில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் லால்சாட் நோக்கி பேருந்து புறப்பட்டு வந்தது. துபி என்ற இடத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் வந்தபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
பின்னர் பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பனாஸ் ஆற்றிற்குள் விழுந்தது. இதனால் பேருந்து தண்ணீரில் மூழ்கியது. உள்ளே இருந்த பயணிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து மனவேதனை அளிப்பதாக கூறியுள்ள மோடி, தன்னுடைய எண்ணங்கள் அனைத்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பற்றியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மீட்பு பணிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் மற்றும் அங்குள்ள நிலைமையை மாநில அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் மோடி கூறியுள்ளார்.