

கோவை:
திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பயன்பாடு இன்றி கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 3,073 ஆழ்துளை கிணறுகள் பயன்பாட்டு இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 1334 ஆழ்துளை கிணறுகளும், பஞ்சாயத்து, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 1739 ஆழ்துளைக் கிணறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உடனடியாக மூட மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் இணைந்து கோவை மாவட்டத்திலுள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை பிளாஸ்டிக் மூடி மூலம் மூடினர். மேலும் தனியாருக்கு சொந்தமான இடத்திலிருந்த 616 ஆழ்துளை கிணறுகளை மழைநீர் வடிகாலாக மாற்றினர். அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த 41 ஆழ்துளை கிணறுகளையும் மழை நீர் வடிகாலாக மாற்றினர். இதேபோன்று பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் மேலும் உள்ளனவா? என தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.