

வாகடூகு:
மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோ, கடந்த 2015ம் ஆண்டில் இருந்து பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. பயங்கரவாதிகளின் கோர தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிருக்குப் பயந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றுள்ளனர்.
பயங்கரவாதிகளை வேட்டையாட ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதத்தை ஒடுக்க நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடக்கு பகுதியில் உள்ள சகேலியன் பிராந்தியத்தின் கோர்கட்ஜி பகுதியில் திங்கட்கிழமையன்று ஆயுதப்படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 30 பேர் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் ராணுவம் தரப்பில் பல வீரர்கள் காயமடைந்திருப்பதாக தேசிய தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.