

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பூஜை காலங்களில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள்.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. இதையொட்டி சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக கேரள மாநில அரசு மற்றும் தேவசம் போர்டு சார்பில் பல்வேறு விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சபரிமலையில் சாலை புதுப்பிப்பு, குடிநீர், மருத்துவம், மின் விளக்கு, சுகாதார வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. முதல்-மந்திரி பினராயி விஜயனும் இந்த பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆண்டு மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையையொட்டி திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டம் சார்பில் சபரிமலைக்கு பக்தர்கள் வசதிக்காக 30 சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.