

மூங்கில்துறைப்பட்டு:
பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் அந்தபகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திருக்கோவிலூர் பகுதியில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு ஆட்டை பிடித்தபடி 3 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி லாரியுடன் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் ராஜா(வயது 25), செல்வம் மகன் வினித் குமார் (18), சிவானூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் குப்புசாமி(28) என்பதும், இளையனார் குப்பத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் கொட்டகையில் இருந்து ஆடு ஒன்றை திருடி மினி லாரியில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் கடத்தி வந்த ஆட்டையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.