

நாகர்கோவில்:
சுசீந்திரம் அருகே உள்ள மணிக்கட்டிபொட்டலில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று முன் பக்க கதவை உடைத்து இந்த கோவிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளிச் சென்றனர். மேலும் தாம்பூலத்தட்டு உள்ளிட்ட பூஜை பொருட்களையும் திருடிச் சென்றனர்.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி கோவில் நிர்வாகிகள் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதேபோல சுசீந்திரம் அருகே உள்ள சொத்தவிளை இசக்கியம்மன் கோவிலில் கொள்ளை நடந்துள்ளது. அந்த கோவிலில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒன்றரை அடி உயர பித்தளை குத்துவிளக்கை திருடிச் சென்றனர். மேலும் உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தையும் அள்ளிச் சென்றனர்.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசுல் புகார் செய்யப்பட்டது. இந்த 2 கொள்ளை சம்பவங்கள் குறித்து சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜாக்கமங்கலம் பூதலிங்க சாமி கோவிலில் பித்தளை குத்துவிளக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.