கடலூர் அருகே கல்லூரி மாணவர் உள்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பாரதியார் வீதியை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர்(வயது 20). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து செல்வார்.

சொந்த ஊருக்கு வந்திருந்த ஷியாம் சுந்தர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிபட்டுவந்தார்.

இதை போல் மேல்பாதி பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம்(42), தூக்கணாம் பாக்கம் கரைமேடு பகுதியை சேர்ந்த சிறுமி பவஸ்ரீ(4) என்பவர் உள்பட 9 பேர் தொடர் காய்ச்சலால் அவதிபட்டு வந்தனர்.

அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் 9 பேருக்கும் ரத்த பரிசோதனை செய்யபட்டது. அதில் ஷியாம் சுந்தர், பன்னீர் செல்வம், பவஸ்ரீ ஆகிய 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவர்கள் 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உள்ள தனிவார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது.

இது பற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் வேறு யாருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என சுகாதார துறை இணை இயக்குனர் கீதாவுக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் தற்போது முதற்கட்டமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களுக்கு 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சென்று அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

நெல்லிக்குப்பம், கரைமேடு பகுதிக்கு சென்றுள்ள மருத்துவ குழுவில் கூடுதலாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று அங்கிருந்து பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? என மருத்துவ பரிசோதனை செய்தனர்.

மேலும் மழைநீர் தேங்கும் வகையில் டயர்கள் மற்றும் பொருட்களை வீடுகளில் பயன்படுத்த வேண்டாம். தண்ணீரை கொதிக்க வைத்து பருக வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை அந்த பகுதி பொது மக்களுக்கு வழங்கினர்.

அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் திறந்தவெளி பகுதியில் டெங்கு கொசுக்கள் மற்றும் கொசு புழுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் மருந்து தெளித்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com