ஈரோடு அருகே தற்கொலை செய்த 3 பேர் வெளியூரை சேர்ந்தவர்களா? போலீசார் விசாரணை

ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் தற்கொலை செய்து கொண்ட 3 பேர் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அருகே தற்கொலை செய்த 3 பேர் வெளியூரை சேர்ந்தவர்களா? போலீசார் விசாரணை
Published on

ஈரோடு:

ஈரோடு பவானி அருகே காலிங்கராயன் வாய்க்காலில் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் ஈரோடு கருங்கல்பாளையம், வளையல் கார வீதி, குப்பி பாலம் என்ற இடத்தில் காலிங்கராயன் வாய்க்காலில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வாய்க்காலில் ஒரு பெண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் சடலம் மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர். தற்கொலை செய்து கொண்ட பெண் தனது சேலையின் துப்பட்டவால் 2 குழந்தைகளின் உடம்பில் கட்டிருந்தார்.

இறந்த பெண்ணிற்கு 35 வயது இருக்கும் ஒரு குழந்தைக்கு 12 வயது மற்றொரு குழந்தைக்கு 7 வயது இருக்கும். பின்னர் மூன்று பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு என்ன காரணம்? என்று உடனடியாக தெரியவில்லை.

இறந்தவர்கள் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று முதலில் போலீசார் சந்தேகப்பட்டனர். இதையடுத்து ஈரோடு ஈரோடு டவுன் போலீசார் துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஈரோடு கருங்கல்பாளையம், சூரம்பட்டி உள்பட போலீஸ் நிலைய பகுதிகளில் பெண்கள் யாராவது மாயமாகி இருக்கிறார்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர் எனினும் அவரகள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இறந்தவர்கள் வெளியூரை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இறந்தவர்களின் போட்டோக்களை ஈரோடு, சேலம், கோவை, நாமக்கல் போன்ற போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக அவர்களது உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com