2-வது டி 20 கிரிக்கெட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இலங்கை அணிக்கு எதிராக 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கேஎல் ராகுல் பந்தை விளாசிய காட்சி.
கேஎல் ராகுல் பந்தை விளாசிய காட்சி.
Published on

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடைபெற்றது.  டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவராலும் அதிரடியாக விளையாட முடியவில்லை. என்றாலும் விக்கெட் இழக்காமல் விளையாடினர்.

இந்த ஜோடியை வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். அவிஷ்கா பெர்னாண்டோ 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். குணதிலகாவை (20) நவ்தீப் சைனி வீழ்த்தினார். குசால் பெரேரா 28 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின் குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை வீழ்த்த இலங்கை அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை.

பும்ரா வீசிய கடைசி ஓவரில் இலங்கை அணி தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் விரட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.

பின்னர் 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக கேஎல் ராகுலும், தவானும் ஆடினர். இருவரும் நேர்த்தியாக ஆடி ரன் குவித்தனர். ஸ்கோர் 71 ரன்னாக இருக்கும்போது கேஎல் ராகுல் 45 ரன்னிலும், தவான் 32 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். 

அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடி 34 ரன் எடுத்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் கோலியும், ரிஷப் பந்தும் ஆடினர். இறுதியில் இந்திய அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 144 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. கோலி 30 ரன்னுடனும், ரிஷப் பந்து 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com