சென்னை:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
தனது வேட்புமனுவில் தொப்பி சின்னத்துக்கே அவர் முன்னுரிமை அளித்துள்ளார். அது கிடைக்காவிட்டால் ‘கிரிக்கெட் மட்டை’, ‘விசில்’ ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத வகையில் அதிக எண்ணிக்கையில் சுயேட்சைகள் களம் இறங்கி உள்ளனர். இவர்களில் 29 பேர் “தொப்பி” சின்னத்தையே கேட்டுள்ளனர்.
இதனால் எந்தவித தடையுமின்றி “தொப்பி” சின்னம் கிடைப்பதில் தினகரனுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே குலுக்கல் முறையில் ‘தொப்பி’ சின்னத்தை ஒதுக்க தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நாளை ‘தொப்பி’ சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்பது தெரிய வரும்.
தினகரனுக்கு ‘தொப்பி’ சின்னம் எப்படியும் கிடைத்து விடும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பி இருந்த நிலையில் 29 பேர் அந்த சின்னத்தை கேட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.