

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த கோர தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன. மேலும் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள், கடந்த 3 மாதங்களாக தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.